இன்றுடன் எங்கள் வட்டம் ஆரம்பித்து சரியாய் ஒரு வருடம் பூர்த்தியாகிறது. அதை கொண்டாடும் பொருட்டு சிறுகதை போட்டி நடத்த வேண்டும் என்று முடிவு செய்து, இதோ இப்பொழுது வெற்றிகரமாக நடத்தி முடித்தி விட்டோம். மண்டையை கலாய்ப்பது மட்டுமே எங்கள் வேலை என்று நினைத்த பல பேரின் எண்ணங்களை தவிடுபொடியாக்கி உள்ளது சிறுகதை போட்டி. போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எங்கள் வட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள். போட்டியின் முடிவு விபரங்கள் இதோ.
பங்கேற்ற கதைகள் : 95
அவற்றை எழுதியவர்கள்: 70
இந்த எழுபது பேரில் பெண்கள் 8 பேர். பெண்களின் கதைகள் வர ஆரம்பித்தபொழுது, அவர்களின் கதைகளை மதிப்பீடு செய்ய பெண் நடுவர் ஒருவராவது இருக்க வேண்டும் என எண்ணி ஒரு பெண் நடுவரை தொடர்பு கொண்டோம், ஆனால் சில காரணங்களால் அவரால் நடுவராக இருக்கமுடியவில்லை.
எங்களது ஐயத்தை பொய்பிக்கும் வகையில் அவர்களில் நான்கு பேரின் கதைகள் இறுதிச் சுற்றிற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தது.
அடுத்ததாக, காலநீட்டிப்பு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தவுடன், ஒரு நடுவர் அதற்கு ஆதரவாகவும் மற்றொருவர் அதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர். கடைசியில், காலநீட்டிப்பு செய்தால் சரியான நேரத்தில் கதைகளை அனுப்பியவர்களுக்கு செய்யும் அநீதியாகிவிடும் என்ற ஒருமித்த கருத்தோடு அந்த கோரிக்கையை நிராகரித்தோம்.
ஜூலை 31-ம் தேதி இரவு 11:59 -ற்கு கிடைத்த கதைதான் போட்டிக்கு கடைசியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கதை. அதற்குப் பிறகு வந்த 5 கதைகளை நிராகரிக்க வேண்டியதாகிவிட்டது. இதற்கு முன்பு விதிகளை மீறியதால் நிராகரிக்கப்பட்ட கதைகளோடு இவற்றையும் சேர்த்தால் மொத்தம் 20 கதைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல், ஒரு போட்டியாளரின் கதை ஸ்பாம் ஃபோல்டெரில் சென்றிருந்ததால் நாங்கள் அதை பார்க்காமல் விட்டுவிட்டோம்.
போட்டியில் நடுவர்களின் மதீப்பீட்டை மட்டும் பிரதானமாக வைத்து முடிவுகள் தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. அறிவுப்பூர்வமாக அலசும் நடுவர்களின் மதீப்பீடு மட்டும் ஆரம்ப எழுத்தாளர்களுக்கு போதுமானதல்ல, பலதரப்பட்ட வாசகர்கள் அந்தக் கதைகளை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுவும் முக்கியம் என்ற காரணத்தால் வாசகர்களின் மதிப்பீட்டையும் ஒரு காரணியாக வைத்திருந்தோம். இறுதி முடிவகளைப் பார்க்கும்போது அதன் தேவை தெளிவாகிறது. நடுவர்கள் முதலாவதாக தேர்ந்தெடுத்த கதையும் , வாசகர்களால் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கதையும் முறையே ஐந்து மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளன. அனைவராலும் விரும்பபப்ட்ட கதைகளே முதல் இடங்களைப் பிடித்துள்ளன.
சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளை அனுப்பியிருந்தனர். ஒரு போட்டியாளர் 12 கதைகளை அனுப்பியிருந்தார். அவரது ஒரு கதைகூட இறுதிச் சுற்றிற்கு தேர்வாகவில்லை என்றறிந்த பொழுது மிகவும் வருந்தினோம். கடைசி நாள் வரை, அவரது மூன்று கதைகள் டாப்-15-ல் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் சுற்றில் நடுவர் ஒருவர் பத்து மதிப்பெண்கள் வழங்கிய கதை இறுதிச் சுற்றிற்கு தகுதியடையாமல் வெளியேறியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆகையால் போட்டியில் கலந்துகொண்ட அத்தனை கதைகளும் ஏதாவது ஒரு வகையில் சிறந்தவையே என்பதை இதன்மூலம் நாம் உணரமுடிகிறது. இன்று வாசகர்களின் யூகங்கள் இதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.
எங்களுக்குள் பல விவாதங்கள் மற்றும் கருத்து மோதல்கள் நடந்தன. அவை அனைத்தும் சிறந்த கதைகளுக்கு பரிசு வழங்கப்படவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே.
வேலைப்பளு அதிகமாக இருந்த காரணத்தால் அறிவித்தபடி நண்பர் பரிசல்காரனால் நமது போட்டியில் நடுவராக இருக்கமுடியவில்லை. இதை இங்கு தெரிவிப்பதற்கு காரணம் இருக்கிறது. ஒருவேளை இரண்டு நடுவர்கள் மதிப்பீடு செய்யாமல் இருந்து, ஒருவரது மதிப்பெண்களை நாங்களே எங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு அளித்திருந்தால் அதைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும்.
இறுதிச் சுற்றில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களையும், போட்டி பற்றி தங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
போட்டியில் பரிசு பெற்றவர்கள் தங்களது வங்கிக் கணக்கு எண்ணை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இரண்டொரு நாட்களில் பணப்பரிமாற்றம் செய்யப்படும். பணம் கிடைத்ததை விமர்சகர் வட்டத்தில் உறுதி செய்யவும்.
முதல் பரிசு = 13000 Rs
இரண்டாம் பரிசு = 7000 Rs
மூன்றாம் பரிசு = 3000 Rs x 3
முதலிடங்களைப் பிடித்த கதைகள் பின்வருமாறு
முதல் பரிசு: அவள் பெயர் பூவெழினி by Subadhra Ravichandran (கடைசி நிமிடத்தில் வந்த கதை)
இரண்டாம் பரிசு : பூந்தளிர்க் காலம் by Sabitha Ibrahim
மூன்றாம் பரிசு -1: தஸ்லீமா by Johns David Anto
மூன்றாம் பரிசு -2: திருட்டுப் பசங்க by Gowtham Krishnan
மூன்றாம் பரிசு -3: நாவலுக்கான 23 குறிப்புகள் by கிருஷ்ண மூர்த்தி
நன்றி,
விமர்சகர் வட்டம்.